விபரீத கரணி ஆசனம்: இந்த ஆசனத்தில் உடல் தலைகீழ் நிலையில் இருக்கும். இதனால் பலவித உடல்நல குறைபாடுகளை விபரீத கரணி ஆசனம் சரி செய்கிறது.
செய்முறை:
- விரிப்பின் மீது 3 அல்லது 4 இலவம் பஞ்சு தலையணைகளை அடுக்கி வைக்கவும்.
- தலையணையின் மீது மையத்தில் அமராமல் முன்பகுதி நுனிக்கும் மையப்பகுதியின் இடையில் அமரவும்.
- மெதுவாக பின்னால் வளைந்து கைகளை தரையில் வைத்து ஊன்றிப் படுத்து உச்சந்தலையை விரிப்பின் மீது வைக்கவும்.
- கால்களை ஒன்று சேர்த்து மேலே உயர்த்தவும்.
- அதே சமயத்தில் தலையை நகர்த்தி தோள் பட்டைகளை விரிப்பின் மீது வைக்கவும்.கால்களை 90 டிகிரிக்கு நீட்டிக் கொண்டு வரவும்.
- உடல் கனம் முழுவதும் தோள்பட்டை கழுத்தில் இருக்கும்படி வைக்கவும்.
- கைகளை சாதாரணமாக தலையணைக்கு பக்கத்தில் வைக்கவும்.சாதாரண மூச்சில் 100 எண்ணிக்கை இருக்கவும்.
- முடிந்ததும் கால்களை கீழே கொண்டு வந்து தரையில் வைக்கவும். சிறிது ஓய்வு எடுக்கவும்.
- மெதுவாக முதுகை விரிப்பின் மீது வைத்து கால்களை நீட்டி சவாசனத்திற்கு வரவும்.
பயன்கள்:
- முகத்தில் பொலிவு ஏற்படும். தலை சுற்றல், தலைவலி, கருப்பை ஏறுதல் அல்லது இறங்கிய நிலை அடிமுதுகு வலி, கழுத்துவலி, முதுகுத்தண்டு கோளாறு, அஜீரணத்தை போக்கி செரிமானத்தையும், கால் வீக்கம், ஆரம்பநிலை யானைக்கால் வியாதி ஆகியவற்றை சரி செய்கிறது.
- கட்டி, முகப்பரு, முகத்தின் சுருக்கங்கள், இளநரை, எக்ஸிமா என்னும் தோல் நோய்கள் ஆகியவற்றை வராமல் தடுக்கிறது. நரம்பு மண்டலம், மூளை மண்டலம், ஐம்புலன்கள் ஆகியவற்றைப் பலப்படுத்துகிறது.
- இரத்தமின்மை, பற்கள் ஆட்டம் ஆகியவற்றை போக்குகிறது. தொடர்ந்து மற்ற ஆசனங்கள், பிராணயாமம், கிரியை பயிற்சிகளுடன் இவ்வாசனத்தை செய்து வந்தால் ஆஸ்துமா, இருமல், மார்பு சளி, ஜலதோஷம், டி.பி., மூக்கடைப்பு, சைனஸ், அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு ஆகிய நோய்கள் குணமடைகிறது.
குறிப்பு:
90 டிகிரி நிலையை அடைந்த பின் கால்களை தள்ளாதீர்கள். அதேபோல் முழங்காள்களை மடக்குவதும் கூடாது.
அவரவரது மருத்துவரின் ஆலோசனையின்படி இந்த ஆசனத்தை செய்வது நல்லது.
Tags: Food